மீண்டும் ஒரு தலைப்பு சர்ச்சை `ஜெயிலர்’ பெயரால் ஏற்பட்டிருக்கிறது. பிரபல மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர் சீனிவாசன் மகன் தியான் சீனிவாசன் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கும் `ஜெயிலர்’ என்று ஏற்கனவே தலைப்பிடப்பட்டதால் இந்தச் சிக்கல்.
‘ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் ஆகஸ்ட் 10-ம் தேதியே, எங்களது படத்தையும் வெளியிடுவோம்’ என்று அதிரடியாக அறிவித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ இயக்குநர் சக்கிர் மடத்திலிடம் பேசினேன்.
“ஜெயிலர் வெளியாகும் அதேநாளில், படத்தை வெளியிடுவது மட்டுமல்ல. ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா நடக்கும் அதே 28-ம் தேதி, நிஜ ஜெயிலரை வைத்தே எங்கள் ‘ஜெயிலர்’ ஆடியோவை வெளியிடவுள்ளோம்” என்று ஜெயிலராகவே அதிரடி காட்டுகிறார் சக்கிர் மடத்தில்.
”எங்கள் ‘ஜெயிலர்’ ஒரு பீரியட் படம். 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து கிரிமினல்கள் ஒரு ஜெயிலரை கொல்லத் துடிக்கிறார்கள். அவர்கள் ஜெயிலரைக் கொன்றார்களா, அல்லது திருந்தினார்களா என்பதுதான் ‘ஜெயிலர்’ ஒன்லைன்.
தியான் சீனிவாசன் ஜெயிலராகவும் மலையாளத்தின் முன்னணி காமெடி நடிகர்கள் ஐந்துபேர் ரொம்ப சீரியஸான கதாபாத்திரங்களில் கிரிமினல்களாக நடித்துள்ளார்கள். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கேரளத் திரைப்படச் சங்கத்தில் ‘ஜெயிலர்’ தலைப்பைப் பதிவுசெய்தேன். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே இந்தத் தலைப்பை மனதில் வைத்தே திரைக்கதையை உருவாக்கினேன்.

ரஜினி அண்ணாவின் ‘ஜெயிலர்’ படக்குழு, கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம்தான் ‘ஜெயிலர்’ தலைப்பைப் பதிவு செய்துள்ளார்கள். ‘ஜெயிலர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தபோதுதான் இதேபெயரில், படம் எடுக்கிறார்கள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம். அதற்கு முன்புவரை, எந்தத் தகவலுமே தெரியாது. ஐந்து மாதத்திற்கு முன்பே எங்கள் திரைப்படத்தின் சார்பாக, ஒரு பிரதிநிதியை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினேன். மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது.
அதனால், சமீபத்தில் சன் பிக்சர்ஸுக்கும் ரஜினி அண்ணாவுக்கும் தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்திற்கும் சேர்த்து கடிதம் எழுதினேன். அதுவும், ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை ஒட்டுமொத்தமாக நான் மாற்றச்சொல்லவில்லை. கேரளாவில் மட்டும் படத்தின் தலைப்பை மாற்றி வெளியிடும்படி தான் கோரிக்கை வைத்தேன்.
‘ஜெயிலர்’ ஐந்து கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட சிறிய படம். ஆனால், ரஜினி அண்ணாவோட ‘ஜெயிலர்’ மெகா பட்ஜெட் படம். அண்ணன் மாஸ் ஹீரோ. அவருக்கு இந்தியா தாண்டியும் ரசிகர்கள் உள்ளார்கள். மார்க்கெட்டும் உள்ளது. எங்கள் படம் அப்படியல்ல. கேரளாவில் மட்டும்தான் வெளியாகிறது. அதனால்தான், கேரளாவில் மட்டும் ‘ஜெயிலர்’ தலைப்பை மாற்றி வெளியிடக் கோரிக்கை வைத்தேன். நியாயமாகப் பார்த்தால், நான்தான் முதலில் தலைப்பைப் பதிவு செய்தேன். சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் என்னிடம் தலைப்பை மாற்றக்கோரிக் கேட்டிருக்கவேண்டும். ஆனால், நான் இவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். மன உளைச்சலுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறேன்” என்று வருத்தமுடன் பேசுபவரிடம், “‘ஜெயிலர்’ வெளியாகும் அதே தேதியில் உங்கள் படத்தையும் வெளியிடுவது ஏன்?” என்று கேட்டேன்.
“நான் இந்தப் படத்தின் இயக்குநர் மட்டுமல்ல. படத்தையும் தயாரிக்கிறேன். கடந்த வருடமே போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையெல்லாம் முடித்துவிட்டோம். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸுக்கு இரண்டு, மூன்று ஓ.டி.டி தளங்களிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது. அதனால்தான், வெளியீடு தாமதமானது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம்.
அதற்குள், ரஜினி அண்ணாவின் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது என்று அறிவிப்பு வந்தது. எங்கள் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள், ‘ரஜினி சார் படம் வந்தபிறகு, நமது படம் வெளியானால் யார் வந்து பார்ப்பார்கள்?’ என்று கேள்வியெழுப்பினார்கள். அவர்களது கேள்வி நியாயமானது. அதுமட்டுமல்ல, மோகன்லால் சாரும் ரஜினி அண்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினி அண்ணாவின் படத்திற்குத்தான் மலையாள ரசிகர்கள் செல்வார்கள்.
அதனால்தான், ரஜினி அண்ணாவின் ‘ஜெயிலர்’ வெளியாகும் அதேநாளில் எங்கள் படத்தையும் வெளியிட முடிவெடுத்தோம். நான் ரஜினி அண்ணா, கமல் சார் படங்களைப் பார்த்துத்தான் சினிமாவுக்கே வந்தேன். ரஜினி அண்ணாவின் மிகப்பெரிய ஃபேன். அவரது, ’16 வயதினிலே’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’ படங்களிலிருந்து அனைத்துப் படங்களையும் தவறாமல் பார்த்திருக்கிறேன். அவரது நடிப்பை மெருகேற்றி மெருகேற்றி வேற லெவலில் உள்ளார். சிறந்த நடிகர் மட்டும் அல்ல; நல்ல மனிதரும்கூட.

எனது நண்பர் ரமேஷ்தான், ‘பாட்ஷா’ படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார். அவருக்கு நல்ல வருமானம் கொடுத்தது. அதேபோல, ‘பாபா’ படத்தையும் வெளியிட்டார். ஆனால், நஷ்டமடைந்தார். அப்போது, ரஜினி அண்ணா நஷ்டம் என்றதும் 75 லட்சம் ரூபாய் திருப்பிக்கொடுத்தார். தன்னால், யாரும் எந்த விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்று நினைக்கும் ரஜினி அண்ணா, எனது சூழ்நிலையையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு மொத்தம் 5 கோடி ரூபாய் செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வங்கியில் லோன் போட்டு கடன் வாங்கியுள்ளதோடு வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டிக் கட்டவே சிரமமாக உள்ளது. எனது எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தில்தான் அடங்கியிருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம்கூட ஏற்பட்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் பெரிய தயாரிப்பு நிறுவனம். அவர்கள் லாபநோக்கில் அனைத்தையும் யோசிப்பார்கள். ஆனால், ரஜினி அண்ணன் நடிகர். இயக்குநர்களின் கஷ்டத்தைப் புரிந்தவர். எனது கஷ்டத்தையும் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராகச் செயல்படவேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லை. உண்மையில், அவர் நடித்த படத்தின் தலைப்பை கேரளாவில் மாற்றக் கோரிக்கை வைப்பதுகூட சங்கடமாகத்தான் உள்ளது. ஆனால், இதைவிட்டால் எனக்கு வேறு வழியும் இல்லை” என்பவரிடம், “தியானின் அப்பா நடிகர் சீனிவாசனோ, அவரது அண்ணன் இயக்குநர் வினித் சீனிவாசனோ இது குறித்துப் பேசினார்களா?” என்று கேட்டேன்.
“அவர்களுக்கும் இது குறித்துப் பேசச் சங்கடம்தான். ஏனென்றால், சீனிவாசனும் ரஜினி சாரும் நல்ல நண்பர்கள். அவரது மகன் நடிக்கும் படத்தில் தலைப்பு பிரச்னையாக வரும் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. இதுதொடர்பாக, என்னுடன் எதுவும் பேசவும் இல்லை. தயாரிப்பாளர் என்பதால் நான்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதுவும் வழக்குகூட நானாகப் போடவில்லை. அவர்கள்தான் போட்டுள்ளார்கள். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது” என்கிறார் சோகத்தோடு.