பள்ளி விட்டு வரும்போது பிளஸ் டூ மாணவர் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, மரணமடைந்த சம்பவம் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று மாலை பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, மறக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த சிலர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திருமுருகனை ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த திருமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிவகங்கை தாலுகா காவல்துறையினர், சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். தப்பி ஓடிய மேலும் இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.

சாத்தரசன் கோட்டையிலுள்ள மைதானத்தில் கைப்பந்து விளையாடும்போது திருமுருகனுக்கும் அங்கிருந்த சில சிறுவர்களுக்கும் ஏற்பட்ட முன் பகையினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.