கல்வி நிலையங்கள் மாணவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்கும் இடமாகவும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளைகளாக இல்லாமல் புதியன படைக்கும் ஆற்றல் மாணவர்களுக்கு வர வேண்டுமாயின் அவர்கள் மேல் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவரும் கிலோக் கணக்கில் புத்தகப் பைகளை தூக்கிக் கொண்டு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
மாதம் ஒரு நாளாவது புத்தகங்கள் இல்லாமல் பள்ளி சென்று பாடம் கற்று வரும் வகையில் No Bag Day சில உத்தரபிரதேசம், கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் உள்ளது. அந்த நாள்களில் மாணவர்களுக்கு சமூக மதிப்பீடுகள் குறித்தும், உடல் ஆரோக்கியம், போதைபொருள்கள் ஒழிப்பு, போக்குவரத்து விதிகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
திருவாரூர் மாணவர்களுக்கு கப்பல் சார்ந்த தொழிற்பயிற்சி வகுப்புகள்
இந்நிலையில் புதுச்சேரியிலும் No Bag Day முறையை செயல்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளையும் புத்தகமில்லா தினமாக கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மாதத்தின் கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முந்தைய தினத்தை No Bag Day ஆக கடைபிடிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் படி ஆண்டுக்கு 10 நாள்கள் No Bag Day கடைபிடிக்கபப்டும். அந்த நாள்களில் கலை இலக்கியம், வினாடி வினா, விளையாட்டு, கைவினைக்கலை ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
No Bag Day திட்டம் என்பது தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் உள்ளதாக கல்வியாளர்களும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதனால் மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அவ்வாறு மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் போது No Bag Day போன்ற சில முக்கிய திட்டங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று தங்கள் எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர் கல்வியாளர்கள்.