முட்புதரை அகற்றியபோது வெடித்த நாட்டு வெடிகுண்டு – திருப்போரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்திருக்கும் பகுதி தண்டலம். இந்தப் பகுதிக்கு அருகேயுள்ள மேட்டுத்தண்டலத்தில் தனியாருக்குச் சொந்தமான ஓர் அட்டை தயாரிப்பு நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் செயல்படாமல் இருந்திருக்கிறது. இதனால் இந்தப் பகுதியைச் சுற்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டிருக்கின்றன.

நாட்டு வெடிகுண்டு

இந்த நிலையில், முட்புதர்களை அகற்றும் பணியில் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியிலிருந்து சீனு, தினேஷ், வாசு, முத்து ஆகிய நால்வர் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அங்கிருந்த முட்புதரை வெட்டும்போது கையில் வைத்திருந்த கத்தி தவறி அங்கிருந்த மூட்டை ஒன்றின் மேல் விழுந்திருக்கிறது. அப்போது, அந்த மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது.

இதில், அங்குத் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சீனு, தினேஷ் ஆகியோர் முகம், தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையிலிருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினர் ஆய்வு – நாட்டு வெடிகுண்டு

இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருப்போரூர் பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் திருப்போரூர் பகுதி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததால், இந்தச் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் வெடிக்காமலிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.

நாட்டு வெடிகுண்டு

அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய போலீஸார், பாதுகாப்பாக கூடுவாஞ்சேரி அருகேயுள்ள வெடிபொருள் கிடங்குக்கு எடுத்துச் சென்றனர். மேலும், முட்புதரில் நாட்டு வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.