அண்ணாமலையின் நடைபயணம்.. நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை.. உஷார் நிலையில் ராமேஸ்வரம்!

ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்க உள்ளார். சுமார் 168 நாட்கள் 234 தொகுதிகளிலும் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 5 கட்டங்களாக நடைபெறும் இந்த பாத யாத்திரை பயணத்தில் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி ஆதரவு திரட்ட உள்ளார்.

அதேநேரம் தமிழகத்தில் ஆளும் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் மக்களிடம் எடுத்துக்கூற உள்ளார் அண்ணாமலை. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் அண்ணாமலையின் இந்த நடை பயண தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.

அவர்தான் அண்ணாமலையின் நடை பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தில் 1700 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை. மேலும் 900 கிலோ மீட்டர் பேருந்தில் செல்லவுள்ளார். 5 கட்டங்களாக நடைபெறும் இந்த பாத யாத்திரை பயணத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பாஜக முக்கிய தலைவர்கள் தலைமை தாங்க உள்ளனர்.

ஆளுநரிடம் கொடுத்த பெட்டி அண்ணாமலை பதில்

இந்த பாதயாத்திரையில் பங்கேற்க பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பதை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான அமித் ஷா, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு செல்வார். அதன்பின்னர் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வேடுக்கும் அமித்ஷா மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அண்ணாமலையின் இந்த நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை நாடாளுமன்ற வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.