மனிதனின் ஆயுட்காலம் குறைவு என்பதால் விவாகரத்து வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்த ராஜீவ் என்பவர் விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அதில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தர கோரி இருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது 7 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பு வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க உத்தரவிட கோரி, அவர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்ஷித் தனி அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், மனிதனின் ஆயுட்காலம் குறைவு என்ற ஆங்கில வரலாற்று அறிஞரின் கூற்றை மேற்கொள் காட்டியதுடன், மனுதாரரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்து தொடர்பான வழக்குகளை அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு அளிக்க குடும்பல நல கோர்ட்டுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கும்படி பதிவாளர் ஜெனரலுக்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.