இந்தியாவில் அரசியல் நெருக்கடிகளுக்கு பஞ்சமில்லை. இந்த சூழலில் இந்தியா என்ற பெயருக்கே சிக்கல் வந்திருக்கிறது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு 28 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ”இந்தியா” (INDIA – Indian National Democratic Inclusive Alliance) என்ற பெயரில் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து களமிறங்க திட்டமிட்டுள்ளன. பாட்னாவில் முதல் கூட்டம், பெங்களூருவில் இரண்டாவது கூட்டம், மும்பையில் மூன்றாவது கூட்டம் என அதிரடியாக காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்த சூழலில் ”இந்தியா” என்ற பெயரை எப்படி பயன்படுத்தலாம். அது நம் நாட்டின் பெயராச்சே? என்று கூறி சமூக ஆர்வலர் கிரிஷ் பரத்வாஜ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கறிஞர் வைபவ் சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில், வழக்கு தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.