கர்நாடகாவில் கபினி அணை நிரம்புவதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு கணிசமான அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 5,112 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 5,353 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில், கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,283.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,434 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 5,875 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.