ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி – இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், மக்களவை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின்னர் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மக்களவையை புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.