உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் – காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் வழங்கினார்

புதுடெல்லி: மக்களவையில் தவறான தகவல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் மனைவி கலாவதி பந்தர்கரை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இச்சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். ராகுல் சந்தித்து பேசிய பெண்ணுக்கு, வீடு மற்றும் அரசின் இதர சலுகைகள் கிடைப்பதை மோடி அரசுதான் உறுதி செய்தது’’ என அமித் ஷா குறிப்பிட்டார்.

இது முற்றிலும் தவறான தகவல் என காங்கிரஸ் எம்.பியும், கொறடாவுமான மாணிக்கம் தாகூர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதற்கு ஆதாரமாக கலாவதி ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் வீடியோ காட்சியையும் சமர்ப்பித்துள்ளார்.

அதில் கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசு தனக்கு எதுவும் செய்யவில்லை. வீடுகட்ட ராகுல் காந்திதான் உதவினார் என கலாவதி கூறியுள்ளார்.

உரிமை மீறல் நோட்டீஸில் மாணிக்கம் தாகூர் கூறுகையில்,‘‘மக்களவையில் பதில் அளிக்கும்போது மத்திய அமைச்சர் அமித் ஷா தவறான தகவலை தெரிவித்துள்ளார். இது மக்களவையில் அவர் தெரிவித்த தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. இது மக்களவை விதிமுறைகள்படி உரிமை மீறல் ஆகும். எனவே, மத்திய அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான தகவல் தெரிவித்ததற்காக, மக்களவையில் அவர் மன்னிப்பு கேட்க சபாநாயகர் உத்தரவிட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.