திருவண்ணாமலை டூர்… கிரிவலப் பாதையில் போய் இப்படியா? ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர்!

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் போக்கு என்பது தொடர் கதையாக சென்று கொண்டிருக்கிறது. கள ஆய்வு மேற்கொள்வது, சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு கிடுக்குப்பிடி போடுவது, திராவிட மாடலுக்குள் தலையை நுழைப்பது, சனாதன தர்மத்தை தூக்கி பிடிப்பது என சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைப்பதில்லை. இதற்கு தமிழக அரசு தரப்பிலும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வேஷ்டி, சட்டையில் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் சுற்றுப்பயணம்

இந்நிலையில் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 10 மற்றும் 11) சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையின் தொலைதூர பகுதிகளுக்கு சென்றேன். அங்கு மாணவர்கள், இயற்கை விவசாயிகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில்முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தேன்.

திருவண்ணாமலையில் சந்திப்பு

மேலும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவன தலைவர்கள், பழங்குடியின தலைவர்கள், கலாசார மற்றும் மதத் தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசினேன். அவர்களின் எதிர்பார்ப்புகள், கவலைகள் பற்றி கிடைத்திருக்கும் நேரடி அனுபவங்கள் மிகவும் ஆழமானது. வேகமாக வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் வேகம், துடிப்பு, சவால்களுக்கு ஏற்ப நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தன்னார்வ அமைப்புகள்

ஆனால் எதிர்மறை சக்தியாக நிலவும் ஊழல்கள் மீதான அவர்களின் ஆழ்ந்த அக்கறை, அவர்களின் உயர்நிலை கனவுகளுக்கு இடையூறாக உள்ளது. நீடித்த வேளாண்மைக்கு இயற்கை விவசாயிகள் மிகவும் பாராட்டத்தக்க சேவையை செய்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏராளமான நீர்நிலைகளை மீட்டெடுத்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில்முனைவோர்கள் செய்துள்ளனர். நல்ல நோக்கத்துக்காக ஒன்றுசேரும் சமூகம் சக்தி வாய்ந்தது.

ஜவ்வாது மலை மக்கள்

”கிராமப்புற மேம்பாட்டுக்கான சமூகம்” என்ற காந்திய மதிப்புகளை ஆழமாக கொண்டுள்ள அரசு சாரா அமைப்பு ஒன்று, கடந்த 40 ஆண்டுகளாக ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தரமான கல்வியை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி சுய உதவி குழுக்களுக்கும் சேவையாற்றி வருகிறது.

கிரிவலப் பாதையில் சிக்கல்

அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்நிலையில் அருணாசலேஸ்வரர் கோயிலின் அருகிலும், கிரிவல பகுதியிலும், போதிய கழிவறைகள் இல்லை. அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதை பார்த்து வருத்தமடைந்தேன். இதுதொடர்பாக பக்தர்கள் தங்கள் மன வேதனையை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம். அது அவ்வாறே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்பது அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.