டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்…!

டெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, டெல்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும் வகையில் கடந்த மே மாதம் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. டெல்லி அரசின் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம் கவர்னருக்கே இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவகாரம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

இந்த அவசர சட்டத்தை கொண்டு வரும் வகையில் டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த மசோதா கடந்த 1-ம் தேதி மக்களவையிலும், 7-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி நிர்வாக திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாக அமலாகியுள்ளது. சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இனி டெல்லியில் பணிபுரியும் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம் கவர்னரிடம் சென்றுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.