தஞ்சாவூர்: மகள் காதலுக்கு எதிர்ப்பு; காதலனை கொன்ற கூலிப்படை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது!

தஞ்சாவூர் அருகே மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை, மகளை காதலித்த இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் உள்பட எட்டு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட காதலன் சக்திவேல்

தஞ்சாவூர் அருகே உள்ள திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (23). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்திருந்த இவர் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பால் கம்பெனிக்கு வாகனம் ஓட்டி வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அம்மாபேட்டை அருகே ராராமுத்திரக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றில் உடலில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. ஏற்கனவே சக்திவேல் காணமால் போனது தொடர்பாக வல்லம் போலீஸார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரித்திருந்தனர். இந்நிலையில் அம்மாப்பேட்டை போலீஸார், மீட்கப்பட்ட சடலம் தொடர்பாக வல்லம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

காதலி தேவிகா

சந்தேகத்தின் பேரில் சக்திவேலின் அம்மாவை அழைத்து வந்து சடலத்தை காட்டியதில் அது சக்திவேல் உடல் தான் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் டி.எஸ்.பி நித்யா மேற்பார்வையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு (48) மகள் தேவிகா (20) என்பவரை சக்திவேல் காதலித்ததால் பாலகுரு கூலிப்படையை ஏவி சக்திவேலை கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், `சக்திவேல், தேவிகா இருவரும் காதலித்துள்ளனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சக்திவேலை விட தேவிகாவின் குடும்பம் வசதியானது என்பதால் இந்த காதல் பாலகுருவுக்கு பிடிக்கவில்லை. இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேசிய பாலகுரு சக்திவேலுக்கும் என் மகளுக்கும் ஒத்து வராது அவளை விட்டு விடும்படி கூறியுள்ளார்.

தந்தை பாலகுரு

அதன் பிறகும் சக்திவேல் தேவிகாவை விடவில்லை. பாலகுரு தன் மகளிடம் சக்திவேலுக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது, குடிப்பழக்கமும் இருக்கிறது கேரக்டர் சரியில்லாத அவனை மறந்து விடு என்றுள்ளார். அவரும் ஒரு கட்டத்தில் சரி என்று சொல்லி விடுகிறார். பின்னரும் சக்திவேல் தேவிகாவிடம் விடாமல் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகுரு சக்திவேலை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்.

செங்கிப்பட்டியைச் சேர்ந்த சத்யா (34) என்பவரிடம் இது குறித்து சொல்ல இருவரும் கூலிப்படை மூலம் கொலை செய்வதற்கு திட்டமிடுகின்றனர். அதன்படி மதுரையிலிருந்து மூன்று கூலிப்படையினரை வர வைத்துள்ளனர். பின்னர் நிலம் விற்பனை செய்வது தொடர்பாக பேச வேண்டும் என பாலகுரு நைஸாக பேசி சக்திவேலை தன்னுடைய தென்னந்தோப்புக்கு அழைத்துள்ளார். அவரும் உண்மையென நம்பி சென்றுள்ளார்.

சக்திவேல் சடலம்

அப்போது அங்கு மறைந்திருந்த கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் சக்திவேலை தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் (19), பாலகுருவின் தோப்பில் வேலை பார்க்கும் கதிர்வேல் (35) ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேல் உடல் மற்றும் அவர் ஓட்டி வந்த டூவிலரையும் குருவாடிப்பட்டி கல்லணைக் கால்வாய் ஆற்றில் வீசி விட்டு சென்று விட்டனர்.

காதலன் சக்திவேலை தனது தந்தை கொலை செய்யப் போவது காதலியான தேவிகாவுக்கும் தெரிந்திருந்தது தான் வேதனை. அவரும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார். சக்திவேல் செல்போனுக்கு கடைசியாக பாலகுரு தான் பேசியிருக்கிறார். அதை வைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து கொலை செய்ததற்கான பாக்கி கூலி பணத்தை வாங்க வர வேண்டும் என கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன் (45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகியோரிடம் பாலகுருவையே பேச வைத்து வரவைத்து அவர்களையும் கைது செய்தோம். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள், மகன், கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.