ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வு குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி சிறப்பான அணி என கூறியுள்ளார். இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் 17 பேரும் சிறந்த வீரர்கள் தான். யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் அக்சர் ஆல்ரவுண்டராக இருப்பதால் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். யாராவது காயமடைந்தால் நிச்சயம் சாஹலுக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
அவர் பேசும்போது, ” ஆசிய கோப்பையில் சரியான கலவையில் அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் பலம் வாய்ந்த அணி தான். சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவருக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு காரணம், அவர் ஆல்ரவுண்டராக இருக்கிறார். ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடிய வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அக்சர் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன். யாராவது காயமைந்தால் நிச்சயம் சாஹலுக்கு தான் அந்த வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, இப்போது அணியில் உள்ள வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். மேலும் அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சு கூட்டணியும் அற்புதமானது என்றார்.
பாகிஸ்தான் அணி இப்போது வலுவாக இருப்பதாகவும், இந்தியாவுக்கு கடும் சவாலை அளிக்கக்கூடியவர்கள் அவர்கள் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். முன்பு இருந்த பலமான வேகப்பந்துவீச்சு கூட்டணியைப் போல் இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணியிலும் வேகப்பந்துவீச்சு கூட்டணி தரமாக இருப்பதாக தெரிவித்த அவர், நிச்சயம் பாகிஸ்தான் அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். பாபர் அசாம் உலகின் சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார். இந்த அணி ஆசிய கோப்பை மட்டுமல்ல, உலக கோப்பையை கூட வெல்லும் ஆற்றல் இருக்கிறது. என்னுடைய கணிப்பில் இருக்கும் 5 அணிகளில் பாகிஸ்தான் அணிக்கும் இடம் உண்டு என்று சவுரவ் கங்குலி கூறினார்.
“அவர்கள் மிகச் சிறந்த அணி. அவர்கள் சிறந்த பந்துவீச்சுத் தாக்குதலைக் கொண்டுள்ளனர் — நசீம் ஷா, ஷாகித் அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப். அவர்கள் மிகவும் சமநிலையான அணி. இந்தியா பலம் வாய்ந்த அணி. குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. இது பெரிய ராக்கெட் அறிவியல் இல்லை. இரு அணிகளும் வலிமையானவை. போட்டி நடைபெறும் நாளில் சிறப்பாக திட்டமிடுபவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள்” என்றும் சவுரவ் கங்குலி கூறினார்.