காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: தாகத்தை தணிக்குமா 5000 கன அடி நீர்!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசு அதிகாரிகள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

நேற்றைய தினம் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பில் தினம் 24 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இறுதியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசு தினமும் 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என தெரிவித்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அந்த பரிந்துரையை முன்வைத்தது.

இந்நிலையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாள்கள் தினமும் 5000 கன அடி நீர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கர்நாடகா அரசோ தண்ணீர் திறக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. தமிழ்நாடு அரசோ 24 ஆயிரம் கன அடி நீர் கேட்டு வருகிறது. எனவே 5000 கன அடி நீருக்கு ஒத்துக்கொள்ளுமா என்பது தெரியாது. 5000 கன அடி நீரை திறந்து விட்டால் அதனால் எந்த பயனும் ஏற்படாது என்பது தமிழக அரசின் வாதமாக இருக்கிறது.

கர்நாடகா அரசு, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கும் நிலையில் தண்ணீர் வருமா, வராதா என காய்ந்து போன பயிர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக டெல்டா விவசாயிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.