நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்…

ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்திற்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும், நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தவும், தங்குதடையின்றி நீர்வழங்கலை வழங்கவும், நீர் சுத்திகரிப்பில் மீளாக்க வலுவுற்பத்தியை பயன்படுத்தவும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், நீர்வழங்கல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் தொடர்பாகவும், பண்ணாட்டு முதலீட்டு முறைமை மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் நீர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட இருக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்திட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை நாடுவதற்கும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.