இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா் ஏ.ஆா். ரஹ்மான்.
இவர் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். ரசிகர்கள் சென்னையில் இசைக்கச்சேரி நடத்துமாறு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்திருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இசைக்கச்சேரியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மழை காரணமாக அன்று இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.

இதனையடுத்து ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் அந்த இசைக்கச்சேரி நேற்று (செப்டம்பர் 10) சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்றது. ஏ.ஆா். ரஹ்மானின் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதனால் பயங்கரமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு நிற்கக் கூட முடியாத அளவுக்குக் கூட்டம் இருந்திருக்கிறது. ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் மக்கள் பலர் ஏ.ஆா். ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவுகளைப் பதிவிட்டு கேள்வி கேட்டனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் மன்னிப்புகோரி ட்வீட் பதிவிட்டிருந்தனர்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to [email protected] along with your grievances. Our team will respond asap@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
இந்நிலையில் தற்போது ஏ.ஆா். ரஹ்மானும் இதுகுறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ அன்புள்ள சென்னை மக்களே ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், [email protected] இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலுடன் உங்கள் குறைகளையும் அனுப்புங்கள். உங்கள் குறைகளை எங்கள் குழு நிவர்த்தி செய்யும்” என்று பதிவிட்டிருக்கிறார்.