A.R Rahman: நெரிசலில் சிக்கிய ரசிகர்கள்; நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் அளித்த பதில்!

ஏ.ஆா். ரஹ்மான் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா்.மேற்கித்திய இசையை நம் நாட்டினா் கேட்டுக்கொண்டிருந்ததை மாற்றி தன் திறமையால் நம் நாட்டின் இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவா். இவர் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். ரசிகர்கள் சென்னையில் இசைக்கச்சேரி நடத்துமாறு ஏ.ஆர்.ரஹ்மானிடம்  கோரிக்கை விடுத்திருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம்  தேதி இசைக்கச்சேரியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார்.

A.R Rahman

ஆனால் மழை காரணமாக அன்று இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் அந்த இசைக்கச்சேரி நேற்று (செப்டம்பர் 10) சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்றது. ஏ.ஆா். ரஹ்மானின் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.  அதனால் பயங்கரமான போக்குவரத்து  நெரிசலும் ஏற்பட்டது.  அங்கு நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருந்திருக்கிறது.

5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.  இதனால் மக்கள் பலர் ஏ.ஆா். ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.   

இந்நிலையில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது. அப்பதிவில், “ பழம்பெருமை வாய்ந்த சென்னைக்கும், ஏ.ஆா். ரஹ்மான் சாருக்கும்  நன்றி.  நம்பமுடியாத அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அபரிமிதமான கூட்டம் எங்கள் நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறது. கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை  நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.