விரட்டி வந்த யானையை வீடியோ எடுத்த வனத்துறை ஊழியர்; பதற்றத்தில் தவறி விழுந்ததால் நடந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டம், நக்சலைட்கள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், தெலங்கானா, கர்நாடகா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்துள்ளது. அதேசமயம் ஒடிசா மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக யானைகள் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்திற்குள் நுழைந்து கிராம மக்களின் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கட்சிரோலியின் பலஸ்காவ் என்ற இடத்திற்கு வந்த ஒடிசா காட்டு யானைகள், அங்குள்ள கிராமத்திற்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தன.

காட்டு யானைகள் (கோப்புப் படம்)

உடனே கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த வனத்துறை வானகத்தை சுதாகர் என்ற ஊழியர் ஓட்டி வந்தார். வனத்துறை ஊழியர்கள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறங்கி காட்டு யானையை விரட்ட முயன்றனர். அந்நேரம் காட்டு யானை வனத்துறை ஊழியர்களை விரட்ட ஆரம்பித்தது. உடனே அவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடினர். டிரைவர் சுதாகரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

சுதாகர்

ஆனால் வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டு, விரட்டி வந்த யானையை தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார். அவர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அவர் சுதாரித்து எழும்புவதற்குள் யானை அங்கு வந்து அவரை தாக்க ஆரம்பித்தது. அவரை யானை கோபத்தில் மிதித்துக் கொன்றுவிட்டது. மற்ற வனத்துறை ஊழியர்கள் காட்டுக்குள் ஓடி தப்பித்துக்கொண்டனர். யானை அங்கிருந்து சென்ற பிறகு வனத்துறை ஊழியர்கள் சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானைகள் அருகில் செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.