திருப்பூர் மாவட்டம், அவிநாசி-மங்கலம் பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையிலுள்ள மழை நீர்வடிகாலில் அடையாளம் தெரியாத பெண் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அப்பெண் அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றிவந்ததும், சற்று மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் என்பதும் தெரியவந்தது. மேலும், பூலக்காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்குச் சொந்தமான மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வாசலில் இருந்து பெண்ணின் சடலத்தை மழைநீர் வடிகால் வரை இழுத்துச் சென்ற ரத்தக் கறை இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அந்தக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், கடை வாசலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நள்ளிரவு நேரத்தில் முகத்தை துணியால் மூடிக் கொண்டு வரும் நபர், அப்பெண்ணின் தலையில் கல்லைப் போட்டுக் கொலைசெய்கிறார். பின்னர், அப்பெண்ணின் காலை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சாலையைக் கடந்து மறுபுறம் புதர் மறைவில் இருந்த நெடுஞ்சாலை மழைநீர் வடிகால் பாதைக்குச் செல்வதும், பிறகு சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீண்டும் கடை முன்பு வந்து, அந்தப் பெண்ணின் குடிநீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்த வழியே செல்வதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்லைப் போட்டு கொடூரமாக செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY