'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி

சித்தார்த் தயாரித்து, நடித்துள்ள படம் 'சித்தா'. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்கி உள்ளார். சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடித்துள்னர். படம் நாளை வெளிவருகிறது. முன்னதாக நடத்த சிறப்பு காட்சியில் பங்கேற்ற சித்தார்த் படம் பற்றி பேசியதாவது:

இது என்னுடைய முதல் படம். முதல் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக நான் ஒரு படம் தயாரிக்கும் பொழுது எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அப்படியான ஒரு உணர்வை 'சித்தா' கொடுத்திருக்கிறது.

இந்த படத்தை ஏன் என்னுடைய அறிமுகப்படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களுடைய உண்மையான வாழ்க்கையை அப்படியே எடுத்துள்ளோம். இதன் முன் தயாரிப்பு வேலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தோம். படம் எனக்கு திருப்தியாக வந்துள்ளது. நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உட்பட சில பேரைத் தவிர படத்திலுள்ள அனைவருமே புதுமுகம். இந்த முடிவையும் முன்கூட்டியே எடுத்தோம். படத்தில் குழந்தைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிமிஷாவுக்கும் வாழ்த்துகள். அஞ்சலி நாயரும் சிறப்பாக நடித்துள்ளார்.

பெரும்பாலான காட்சிகள் பழனியில் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லர். இந்தப் படம் திரையரங்குகளில் பார்ப்பதற்காகவே உருவாக்கினேன். குடும்பத்துடன் நிச்சயம் இதைப் பார்க்கலாம். ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம், காவல் நிலையம், பள்ளி என இந்த சுற்று வட்டாரங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நாம் எல்லோரும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். அன்போடும் அக்கறையோடும் இந்த படத்தை எடுத்துள்ளோம். என் குரு மணிரத்தினம், கமல் சாரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். மிகவும் பாசிட்டிவாக சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய விருது கிடைத்தது போலதான். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.