யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர்

'மாநாடு' படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் 'பி ஸ்டுடியோஸ்' இணைந்து தயாரித்து வரும் படம் 'வணங்கான்'. பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அருண் விஜய் தனது கைகளில் கடவுள் மறுப்பாளர் ஈ.வே.ராமசாமி சிலையையும், விநாயகர் சிலையையும் வைத்துக் கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சி அளிக்கிறார். இதனால் இந்த படம் ஆத்திக, நாத்திக மோதலை பேசப்போகிறது என்றும். கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை தரப்போகிறது. என்றும் நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து கூறும்போது “இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குநர் பாலா. அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதேபோல வணங்கான்படத்தின் முதல் பார்வை வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. யாரும் தொடத் துணியாத ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். அருண்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்கிறார். படம் வரும் பொங்கல் அன்று வெளிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.