சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், 22.9.2023-ம் தேதி இரவு மெரினா கடற்கரையில் தன்னுடைய தோழியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னை போலீஸ் என அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், அந்த நபரின் தோழியிடம் போலீஸ் ஸ்டைலில் விசாரித்தார். அப்போது இருவரும் அளித்த பதிலையடுத்து `உங்கள்மீது சந்தேகமாக இருக்கிறது. அதனால், இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்’ என அந்த நபர் மிரட்டியிருக்கறார். அதோடு அவர்களின் குடும்பத்தினரின் செல்போன் நம்பரையும் கேட்ட அந்த நபர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இருவரும், அந்த நபரிடம் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியதாகத் தெரிகிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அந்தப் பெண்ணிடமிருந்து கூகுள் பே மூலம் 12,000 ரூபாயை மிரட்டி வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, மெரினா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். கூகுள் பே நம்பர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அடிப்படையில் விசாரித்தபோது, போலீஸ் எனக்கூறி மிரட்டியவர் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த அசர் அலி (30) எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் கைதுசெய்து, 12,000 ரூபாய் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அசர் அலி, மெரினா கடற்கரையில் பலூன் கடை வைத்திருப்பது தெரியவந்தது. இவர்மீது ஏற்கெனவே அடையாறு, வியாசர்பாடி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருக்கின்றன. விசாரணைக்குப் பிறகு அசர் அலி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.