சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (அக். 15, 16) சில இடங்களிலும், வரும் 17, 18-ம் தேதிகளில்ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19, 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
அக். 14-ம் தேதி (நேற்று) காலை8 மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழைஅளவுகளின்படி தேனி மாவட்டம் தேக்கடியில் 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியலில் 8 செ.மீ., திற்பரப்பு, பேச்சிப்பாறையில் 6 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, மீமிசல், தென்காசி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.