அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்: ம.பி, ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக-வுக்கு கைகொடுக்குமா இலவசங்கள்?!

பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் கொடுப்பதாக தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள்.

பா.ஜ.க. பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது. அதேசமயம் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும், கேஸ் சிலிண்டர் 500 ரூபாயிக்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அசோக் கெலாட்

இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும். பா.ஜ.க.வும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இலவச திட்டங்களை அறிவித்து இருக்கிறது. மீண்டும் வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவி கிடையாது என்று மறைமுகமாக சிவ்ராஜ் சிங் செளகானிடம் பா.ஜ.க.தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி இருந்தும் சிவ்ராஜ் சிங் இலவசங்களை அறிவிக்க தயங்கவில்லை. தற்போது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டு வரும் 1,250 ரூபாய் தேர்தல் வெற்றிக்கு பிறகு 3000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று சிவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 1.32 கோடி பெண்களுக்கு இத்தொகை கொடுக்க மட்டும் 47 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.

இது தவிர சிலிண்டர் 450 ரூபாயில் வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார். இவற்றை கணக்கிட்டால் 50,000 கோடியை தாண்டும். மத்திய பிரதேசத்தில் இரண்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பட்ஜெட்டில் 50000 கோடிக்கு செலவு இருக்கிறது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம் மட்டுமல்லாது ராஜஸ்தானிலும் இலவச திட்டங்களை வாரி வழங்கி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த திட்டங்களோடு சேர்த்து விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நிகராக பா.ஜ.க.வும் இலவச திட்டங்களை அறிவித்ததோடு பிரதமர் மோடியை பெரிதும் நம்பி இருக்கிறது.

நரேந்திர மோடி – மல்லிகார்ஜுன கார்கே

கடந்த நான்கு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானிற்கு 9 முறை சுற்றுப்பயணம் வந்து அசோக் கெலாட் அரசை ஊழல் அரசு என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட்டிற்கு அவரது சொந்த கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் ஆதரவாளர்கள் முழுமையாக ஆதரவு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சச்சின் பைலட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அசோக் கெலாட் கடந்த சில மாதங்களாக மட்டும் சச்சின் பைலட்டை விமர்த்து பேசுவதை நிறுத்தி இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.

ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரிக்கும் சக்திகளாக இருந்துகொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள போதிலும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.க.எம்.எல்.ஏ.வாசுதேவ் அளித்த பேட்டியில், ”மக்கள் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற முடிவு செய்துவிட்டார்கள். தேர்தலின் போது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்கள், விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்” என்றார்.

இலவச அறிவிப்புகளை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.