மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்திற்கு முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு கொடுத்த இடஒதுக்கீட்டை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து மராத்தா இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோஜ் இரண்டாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. அரசு இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்காத வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மராத்தா சமுதாய மக்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர். நேற்று காலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.பிரகாஷ் வீடு மற்றும் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

அதோடு பீட் மாவட்டத்தில் மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்தீப் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெய்தத் கிரிசாகர் ஆகியோரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். அரசு பேருந்துகளும் தாக்குதலுக்கு உள்ளானது. சந்தீப் குடும்பத்திற்கு சொந்தமான கல்லூரி அலுவலகத்திற்கும் அரசியல்வாதிகளின் ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களும் தாக்குதலுக்கு ஆளானது. பீட் மாவட்டத்தில் வன்முறை பெரிய அளவில் நடந்ததால் நேற்று இரவில் இருந்து மாவட்டத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீட் புறநகர் பகுதியில் அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு மிகவும் நெருக்கமானவரின் ஹோட்டல் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. இதனால் பீட் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டது.
நாசிக் சிவசேனா எம்.பி.கோட்சே மராத்தா இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் அனுப்பப் போவதாக குறிப்பிட்டுள்ளார். சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள கங்காபூரில் பா.ஜ.க.எம்.எல்.ஏ. பிரசாந்த் அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானது. மராத்தி கிராந்தி மோர்ச்சா மற்றும் சகால் மராத்தா சமாஜ் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். பேரணியின் போது பல இடங்களில் அரசு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.
ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. பீட் பேருந்து நிலையத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களுக்கு தீவைத்தனர். இச்சம்பவங்களால் 30 அரசு பேருந்து நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்லவேண்டிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரம் கிராமங்களுக்குள் அரசியல்வாதிகள் வர தடை விதித்துள்ளனர்.

இப்பிரச்னை குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை சந்தித்து பேசினார். வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதோடு இப்பிரச்னை குறித்து இரவில் முதல்வர் ஷிண்டே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் ஷிண்டே அளித்த பேட்டியில், “மராத்தா சமுதாயத்திற்கு இரண்டு கட்டமாக இட ஒதுக்கீடு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசுக்கு ஆலோசனை கொடுக்க மூன்று முன்னாள் நீதிபதிகள் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு குன்பி இனத்தவர்களோடு தொடர்புடைய மராத்தாக்கள் என்பதற்கான ஆவணங்களை கொடுத்துள்ள 11,600 பேருக்கு உடனே குன்பி இன சாதிச்சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் போது மராத்தா இன மக்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுக்கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கே தண்ணீர் மட்டும் அருந்த ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.