2016-ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் (பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர், அவர்களை சாதிரீதியாகத் திட்டி, கண்மூடித்தனமாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதையடுத்து, தங்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர்மீதும் வழக்கு பதிவுசெய்யக் கோரி, ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று வந்தது. முன்னதாக, குடும்பத்தினரைத் தாக்கிய காவலர்கள்மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
காவலர்கள் மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்து, 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.