மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயில் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.

கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் (டான்சி) பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா (குடமுழுக்கு) இன்று (8-ம் தேதி) தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு யாகங்கள், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், கும்பாலாரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை (9-ம் தேதி) இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகம் தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 10-ம் தேதி அன்று குடமுழுக்கு விழாவினை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தி வைக்கிறார்.

இந்நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியதையொட்டி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதானம் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்து கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம், பூஜை பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில், முன்னாள் கவுன்சிலர் காரமத், ரியாஸ், ஜாபர், ஜலீல், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.