ரசிகரை அறைந்த சம்பவம் : மன்னிப்பு கேட்ட நானா படேகர்

பாலிவுட்டின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நானா படேகர். வாரணாசியில் அவரது அடுத்த படமான 'ஜர்னி' படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அந்த ரசிகரை தட்டி அறைந்து விரட்டினார் நானா. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் இது குறித்து நானா படேகரை விமர்சித்திருந்தார்கள். ஆனால், படத்தின் இயக்குனரான அனில் சர்மா இது பொய்யான ஒன்று, படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நானா படேகர். “ஒரு பையனை நான் அறைந்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அப்படியான ஒரு காட்சி படத்தில் உள்ளது. அந்தக் காட்சியை ஒரு முறை ரிகர்சல் செய்தோம். மீண்டும் இரண்டாவது முறை ரிகர்சல் செய்ய திட்டமிட்டிருந்தோம். அப்போது இயக்குனர் என்னை நடிக்கச் சொன்னார். வீடியோவில் அந்த பையன் வரும் போது காட்சியை ஆரம்பிக்க வேண்டும். அவர் எங்களது குழுவில் ஒருவர் என நான் நினைத்து அறைந்தேன். பின்னர்தான் அவர் எங்களது குழுவில் இல்லை எனத் தெரிய வந்தது. அவரை நான் மீண்டும் அழைத்தேன், ஆனால், அவர் ஓடிவிட்டார். அவருடைய நண்பர் அந்த வீடியோவை எடுத்திருக்கலாம். நான் யார் போட்டோ எடுக்க வந்தாலும் வேண்டாம் என சொல்ல மாட்டேன். நான் அப்படி செய்ய மாட்டேன். இது தவறுதலாக நிகழ்ந்த ஒன்று. இதில் ஏதாவது தவறான புரிதல் இருந்தால் என்னை மன்னியுங்கள். இது போன்று மீண்டும் நான் செய்ய மாட்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.