ரத்லாம் : மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், ரத்லாம் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் பராஸ் சக்லேச்சா, முதியவர் ஒருவரிடம் செருப்பால் அடி வாங்கி ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நடந்து உள்ளது.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம், 230 சட்டசபை தொகுதிகளை உடைய இங்கு, கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில், 76 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகி உள்ளது. இத்தேர்தலில், ஆளும் பா.ஜ., – காங்., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ரத்லாம் மாவட்டத்தில் உள்ள ரத்லாம் சட்டசபை தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சேட்டன் காஷ்யப்பை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர் பராஸ் சக்லேச்சா, மோவ் சாலையில் உள்ள ஒரு தர்காவில் வசிக்கும் பக்கீர் என்ற இஸ்லாமிய முதியவரிடம், புது செருப்புகளை கொடுத்து அடி வாங்கி ஆசிர்வாதம் பெற்றுஉள்ளார்.
அப்பகுதியில் வசிப்பவர்களால் பாபாஜி என்றழைக்கப்படும் பக்கீரிடம் செருப்பால் அடி வாங்கினால் நினைத்தது நடக்கும் என, பொது மக்கள் நம்புகின்றனர்.
அந்த வகையில், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பக்கீர் பாபாஜியிடம், காங்., வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதிய ஜோடி செருப்பு வாங்கி கொடுத்து, அதில் அடி வாங்கி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் இதை மூடநம்பிக்கை என விமர்சனம் செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement