காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக இருக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இது தொடர்பாக ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்திலுள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி பூட்டி சீல் வைத்தனர். அனுமதியின்றி அலுவலக வளாகத்தைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின்கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இப்படி சோனியா காந்தி, ராகுல் காந்தியை சுற்றிவரும் இந்த வழக்கில் தற்போது, நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணை தொடர்பாக, யங் இந்தியா-வுக்குச் சொந்தமான ரூ. 90 கோடி மதிப்புள்ள சொத்து, அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. அந்த சொத்தில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் மற்றும் லக்னோவில் உள்ள நேரு பவன் ஆகியவை அடங்கும்.
இந்த சொத்துகள் முடக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பா.ஜ.க அரசின் ஏவலான அமலாக்கத்துறையின் நடவடிக்கை மூலம், நடந்துவரும் தேர்தல்கள் முடிவுகள் குறித்து பா.ஜ.கவின் பீதி தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்து வரும் தேர்தல்களின் தோல்விகளிலிருந்து, கவனத்தைத் திசைதிருப்ப, அவர்களின் விரக்தியை அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக்கொள்வது பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில்,” பணமோசடி அல்லது பணப் பரிமாற்றம் குறித்த எந்த ஆதாரமும் இல்லாமல், இந்த பழிவாங்கும் தந்திரங்கள் காங்கிரஸையோ அல்லது எதிர்க்கட்சியையோ வீழ்த்தாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.