வில்லியாக நடிக்க விரும்பும் வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வசுந்தரா. அதற்கு முன்பு வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் அதிசயா என்ற பெயரில் நடித்திருந்தார். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் 'மாடர்ன் லவ் சென்னை' என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது வில்லியாக நடிக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் அப்படி நடிப்பவர்களை நிஜத்திலும் வில்லியாகவே பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. மக்களும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான். ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம்.

அதனால் இனி கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். அந்தவகையில் தற்போது ஒரு மல்டி ஸ்டாரர் கதையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த படமே பெண்களை மையப்படுத்தி ஒரு மாடர்ன் க்ரைம் டிராமாவாகத்தான் உருவாகி வருகிறது. படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. அதில் நானும் ஒரு திருப்பமாக இருப்பேன். இது தவிர ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். அதை பற்றிய தகவல் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்.

தமிழ் தான் எப்போதுமே என் சொந்த வீடு. என்றாலும் ஒரு நடிகையாக முழுமை பெற மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். குறிப்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. மலையாள படங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்கிற ஏக்கம் இயல்பாகவே எனக்குள் எழும். தெலுங்கில் ஆரம்பத்தில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. சில சூழல்கள் காரணமாக அந்த வாய்ப்புகள் மிஸ் ஆகி போனது. அந்த வகையில் மன திருப்திக்காக மலையாள படங்களிலும் கேரியர் வளர்ச்சிக்காக தெலுங்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். என்கிறார் வசுந்தரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.