வடக்கு – கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (22.11.2023) நிதி அமைச்சில்; கைச்சாத்திடப்பட்டது.

இவ் ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

அண்மையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தபோது கலந்துரையாடப்பட்டமைக்கு அமைய, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது கடற்றொழிலாளர்களுக்கான குளிரூட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.