மகாதேவ் புக் சூதாட்ட மொபைல் செயலியின் நிறுவனர் செளரப், தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் இந்த மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சத்தீஸ்கர் காவல்துறை, அரசியல்வாதிகள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் கோடிக்கணக்கில் செளரப் லஞ்சம் கொடுத்திருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், சத்தீஸ்கரில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்தி, செளரப் – பூபேஷ் பாகல் இருவருக்கும் மத்தியில் தகவல், பணப் பரிமாற்றத்துக்காக உதவியதாக ஆசிம் தாஸ் என்பவரைக் கைதுசெய்தது.

அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலில், “கைது செய்யப்பட்ட ஆசிம் தாஸிடமிருந்து 5.39 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுபம் சோனி என்பவர் அடிக்கடி ஆசிம் தாஸுடன் தொடர்பிலிருந்ததும், அவரின் இமெயில் விவரங்களில் அடிக்கடி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.508 கோடி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆசிம் தாஸிடம் விசாரித்ததில், துபாயிலிருந்து பணம் கொடுப்பதற்காகத்தான் அவர் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சுபம் சோனிக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினோம். ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. துபாயிலிருந்து, இமெயில் மூலம் சில ஆவணங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் அடிக்கடி பூபேஷ் பாகலுக்கு லஞ்சம் கொடுத்துவந்ததும், பூபேஷ் பாகல் ஆலோசனையின்படியே, துபாய்க்குச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் சத்தீஸ்கர் முதல்வர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செளரப் – பூபேஷ் பாகல் இருவருக்கும் மத்தியில் தகவல், பணப் பரிமாற்றத்துக்கு உதவியதாக ஆசிம் தாஸ், சிறையிலிருந்து அமலாக்கத்துறை தலைமை அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில்,“சட்டவிரோத சூதாட்ட செயலியின் மூளையாகச் செயல்பட்ட சுபம் சோனி எனது பால்ய நண்பர். சுபம் சோனியின் வற்புறுத்தலின் பேரில் இந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு முறை துபாய் சென்றிருந்தேன்.
சத்தீஸ்கரில் கட்டுமானத் தொழில் கான்டிராக்டராக ஆர்வமாக இருந்தேன். எனவே, எனக்குத் தொழில் தொடங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார்கள். நான் ராய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய அன்று, ஒரு காரை எடுத்துக்கொண்டு விஐபி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் செல்லுமாறு கூறினார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தச் சொன்னார்கள். பின்னர் ஒரு நபர் பணப் பைகளை காரில் வைத்தார். உடனே என்னுடைய ஹோட்டல் அறைக்கு அதை எடுத்துச் செல்லுமாறு தொலைபேசியிலேயே கூறினார்கள்.

நானும் அவ்வாறே செய்தேன். சிறிது நேரம் கழித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் என் அறைக்கு வந்து என்னை அவர்களுடன் அழைத்துச் சென்றனர். அதன் பிறகுதான் நான் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இந்த விவகாரத்தில் அரசியல், தொழிற்துறை சார்ந்தவர்களுக்கு பணமோ அல்லது வேறு எந்த உதவியோ வழங்கவில்லை. என்மீது பொய்கள் மூலம் குற்றம் கட்டமைக்கப்படுகிறது. எனக்கு புரியாத ஆங்கில மொழியில் ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள்” என அமலாக்கத்துறையின் அறிக்கைக்கு நேரெதிரான வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ508 கோடி லஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி உட்பட பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரின் இந்த கடிதம் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.