சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பூர்ணிமா நீத்து. இவரின் அம்மா சாந்தகுமாரி (66). இவர் பணத்தை டெபாசிட் செய்ய குறிப்பிட்ட ஒரு தனியார் வங்கிக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போது அங்கு வேலைப்பார்த்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சாந்தகுமாரிக்கு அறிமுகமாகியிருக்கிறார். சாந்தகுமாரியிடமும் அவரின் மகளான பூர்ணிமாவிடமும் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை தெரிந்துக் கொண்ட ஜெயஸ்ரீ, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதை விட தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஜெயஸ்ரீ கூறியிருக்கிறார். பின்னர், தானும் தன்னுடைய குடும்பத்தினரும் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறியதோடு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக பணம் தருகிறேன் என சாந்தகுமாரியிடமும் பூர்ணிமாவிடமும் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார் ஜெயஸ்ரீ.

அதை நம்பிய சாந்தகுமாரியும் பூர்ணிமாவும் சேர்ந்து 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 2.65 கோடி ரூபாயை ஜெயஸ்ரீ கூறிய டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு லாபத் தொகையாக 64 லட்சம் ரூபாயை மட்டும் ஜெயஸ்ரீ கொடுத்திருக்கிறார். பின்னர் லாபத் தொகையை கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்திருக்கிறார் . அதனால் பூர்ணிமாவும் சாந்தகுமாரியும் தாங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப தரும்படி ஜெயஸ்ரீயிடம் பலதடவை கேட்டிருக்கிறார்கள். ஆனால் பணத்தைக் கொடுக்காமல் ஜெயஸ்ரீ ஏமாற்றி வந்திருக்கிறார். இதுகுறித்து பூர்ணிமா, சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவணங்கள் மோசடி பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் நிஷா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் ஜெயஸ்ரீ, போலி ஆவணங்கள் மூலம் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயஸ்ரீயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜெயஸ்ரீயிடம் விசாரித்தபோது தன்னுடைய கணவர் வைத்தீஸ்வரன்தான் டிரேடிங் பிசினஸைக் கவனித்து வந்தார். அவர் திடீரென இறந்துவிட்டதால்தான் பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்ட ஜெயஸ்ரீ பட்டதாரி. முதலீடாக பெற்ற பணத்தை அவர் என்ன செய்தார் என்று மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா விசாரித்து வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.