இங்கு 'ஜவான்' ஓடுகிறது, ஹிந்தியில் 'ஜெயிலர்' ஓடுகிறது : ரன்பீர் கபூர் பேச்சு

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடித்துள்ள படம் 'அனிமல்'. ஹிந்தியில் தயாராகி உள்ள இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வருகிற டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் பேசியதாவது: இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப், இது ரீமேக் இல்லை ஒரிஜினல் படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல்தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது.

தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரைக்கும் செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அனிமல் (விலங்கு) எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும். இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத்தான் படம் எடுக்கிறோம், அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்கள் தங்கள் ஹீரோக்களை கொண்டாடுகிறார்கள். அதேபோல தமிழ் படங்களும் என்னை ஈர்க்கிறது. கடந்த ஒரு வருடத்தில் நான் பார்த்த படங்களில் ஜெயிலர், லியோ, விக்ரம் படங்கள் சிறந்ததாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதே விழாவில் ராஷ்மிகா மந்தனா பேசியதாவது: இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டு, பிடித்த கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான். ஒரு கதை பிடித்துவிட்டால் பிறகு அந்த இயக்குனர் எப்படி என்பதை கவனிப்பேன். இயக்குனரும் அவரது டீமும் பிடித்துவிட்டால் என்னை முழுமையாக ஒப்படைத்து விடுவேன். அதன்பிறகு இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதையே கேட்பேன்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. அதேபோல ஹீரோக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை. நான் நடித்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப் படம்தான், என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.