நயன்தாராவுக்காக காத்திருந்த 'அன்னபூரணி'

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'அன்னபூரணி'. இப்படத்தில் சத்யராஜ், ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். ஷங்கர் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி வெளிவருகிறது.

படம் குறித்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா அளித்த பேட்டி வருமாறு: சின்ன வயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் எப்படி அந்த துறையில் சாதிக்கிறாள் என்பது கதை. அவளது குடும்பம், அவள் சார்ந்த சமூகம், ஆணாதிக்கம் இவற்றை எதிர்த்து, சமாளித்து எப்படி லட்சியத்தை அடைகிறாள் என்பது திரைக்கதை.

இந்த கதையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாராவிடம் சொன்னேன். அவரும் நான் ஆக்ஷன் த்ரில்லர், கமர்ஷியல் படங்களில்தான் அதிகம் நடிக்கிறேன். இதுபோன்ற ஒரு படம் அதற்கு மாற்றாக அமையும், நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இப்போது நான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொண்டுதான் இந்த படத்திற்கு வரமுடியும், அதுவரை காத்திருக்க முடியுமா என்றார். அவருக்காக காத்திருந்து இந்த படத்தை முடித்துள்ளோம்.

படத்தில் மனிதநேயம், அன்பு, தன்னம்பிக்கை குறித்து பேசியிருக்கிறேன். முந்தைய நயன்தாராவின் படங்களிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். ஒவ்வொரு சமையல் கலைஞரையும் படம் பெருமைப்படுத்தும். சமையல் வெறும் கலை அல்ல, அது தெய்வீகமானது என்று சொல்கிறோம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.