மேக்ஸ்வெல் "அதிரடி சதம்" : ஆஸ்திரேலியா திரில் வெற்றி..!!

கவுகாத்தி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அணி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து ருதுராஜ் கெயிக்வாட் நிலைத்து ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் ருதுராஜ் கெயிக்வாட் அரைசதம் அடித்தார்.

அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய ருதுராஜ் கெயிக்வாட் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெயிக்வாட் 57பந்துகளில் 123 ரன்களும் , திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹார்டி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டும் 35 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இங்க்லிஸ் 10 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்களும், டிம் டேவிட் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல், தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினார். கடைசி ஒவரில் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அதிரடியில் மிரட்டிய மேக்ஸ்வெல் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இறுதியில் மேக்ஸ்வெல் 104 (48) ரன்களும், மேத்யூ வேட் 28 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், அவேஸ் கான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி திரில் வெற்றிபெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.