புதுடில்லி : புதுடில்லியில் நண்பரின் வீட்டில் தங்கியிருந்த மணிப்பூரைச் சேர்ந்த குடும்பத்தினர் மீது, ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லியின் தென்கிழக்கு பகுதியான சன்லைட் காலனிக்கு மணிப்பூரைச் சேர்ந்த நபர், தன் மனைவி மற்றும் சகோதரியுடன் நண்பரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.
அங்கிருந்து திரும்பி செல்ல வாடகை கார் பதிவு செய்ய முயன்றபோது, அவரது மொபைல் போனில் சார்ஜ் இல்லாததால், அவ்வழியாக சென்ற நபரிடம் உதவி கோரியுள்ளார். அவரும், வாடகை கார் பதிவு செய்து உதவினார்.
காருக்காக காத்திருந்த போது உதவ வந்தவர், மணிப்பூர் நபரின் மனைவி மற்றும் சகோதரி குறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிப்பூர் நபர், அவரை தாக்கினார்.
இதனால் அந்த நபர், அப்பகுதியைச் சேர்ந்த சிலரையும் உதவிக்கு அழைத்து, அக்குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல்அறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement