வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக உருமாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. பலத்த மழை, தொடர் காற்று, வேகமாக நிரம்பிய ஏரிகள், வெளியேற்றப்படும் நீரை உள்வாங்காத கடல் எனச் சென்னையைத் தலைகீழாக்கியிருந்தது இந்தப் புயல். நிவாரணப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மற்றப் பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் வேகமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் பல இடங்களில் மழைநீர் வெளியேற்றப்படவில்லை. இதற்கிடையில், மழைநீர் சூழ்ந்த பகுதிகள், அடையாறு, கூவம் கரைப் பகுதி மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையில் மத்திய அரசிடம் மாபெரும் வெள்ளத்தை எதிர்கொண்ட தமிழ்நாட்டின் நிவாரணப் பணிக்காக 5,060 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வளர்ந்த பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பங்கான ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழ்நாட்டுக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.

இரு மாநிலங்களுக்கும் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு பதிவில், “கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது பெரிய வெள்ளத்தைச் சென்னை எதிர்கொண்டிருக்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, நகர்ப்புற வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு, தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் (NDMF) கீழ், ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு’ ரூ.561.29 கோடி, ஒதுக்கப்படுகிறது.
இந்த திட்டம் சென்னையை வெள்ளத்தைத் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சிகளில் இது முதன்மையானது மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.