நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், நேற்று பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்த இருவரால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அத்துமீறிக் குதித்தவர்களை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பிடித்தனர், அப்போது அத்துமீறிய இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த வண்ணப்புகை வரும் கேன்களை பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் நாடாளுமன்றப் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இருவர் வண்ணப் புகை வெளிவரும் வகையிலான புகைக்குண்டுகளை வீசினர். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேரை நாடாளுமன்ற வளாகத்திலும், ஒருவரை வெளியேயும் காவல்துறை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும்போது, அவர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,”எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள், விவசாயிகள், சிலர் சிறு கடை நடத்துபவர்கள். நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்களல்ல, நாங்கள் வேலை வாய்ப்பில்லாத மாணவர்கள். இது எங்களின் ஒரு முயற்சி. எங்கள் குரல்களை நசுக்குவதற்கான முயற்சிகள் நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மக்களவைக்குள் நுழைந்த இருவரில் ஒருவர் பெயர் சாகர் சர்மா என்றும், அவரின் அனுமதிச்சீட்டுக்குப் பரிந்துரை செய்தது கர்நாடக மாநிலம், மைசூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா என்றும் தகவல் வெளியானது. இது தொடர்பாக எதிர்க்கட்சியினர், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். எனவே அரசுக்கு சில செய்திகளைத் தெரிவிக்க இவ்வாறு செய்திருக்கிறார்கள். யாரேனும் அல்லது எந்த அமைப்பினராலும் இவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டார்களா என்பதை அறிய முயல்கிறோம்”எனத் தெரிவித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து வெளியான தகவலில் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னைகள், மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்னைகளால் அவர்கள் வருத்தமடைந்ததாகவும், ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, அவர்களின் கவனத்தை ஈர்க்க வண்ண புகையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.