ரசிகர்கள் கிண்டல் : எக்ஸ் தளத்தில் விலகிய தெலுங்கு பாடலாசிரியர்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் ராமஜோகய்யா சாஸ்திரி. கடந்த பதினைந்து வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராமஜோகய்யா சாஸ்திரி எழுதிய 'ஓ மை பேபி' பாடல் ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்புதான் அப்பாடல் வெளியானது. ஆனால், பாடல் நன்றாக இல்லை என ரசிகர்கள் பலர் இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் ராமஜோகய்யா ஆகியோரை சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கிண்டலடித்தனர்.

அது குறித்து ராமஜோகய்யாவும் எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். “ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அந்தப் பாடலின் நேரம் குறைவாக இருந்ததைத் தவிர அதில் வேறு எந்தக் குறையும் இல்லை. எங்கள் வேலையை நாங்கள் ரசித்து செய்தோம். இந்தக் கலையில் எந்த அன்பும் இல்லாமல் நாங்கள் வேலை பார்க்க மாட்டோம். உங்கள் வார்த்தைகளில் கவனமும், மரியாதையும் தேவை,” என்று அவர் பதிவிட்டிருந்தார். இருப்பினும் கிண்டலும், கேலியும் தொடர்ந்தது.

இந்நிலையில் ராமஜோகய்யா எக்ஸ் தளத்திலிருந்து விலகிவிட்டார். இது தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.