சென்னை ஆலை விற்பனை..? ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு இதுதான்..!

சென்னை அருகே மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் ஆலை அமைந்திருக்கிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களையும், 3.4 லட்சம் இஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது.

ஃபோர்டு

எனினும், ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததாலும், கொரோனா காலகட்டத்தில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதாலும் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தது. எனவே, ஆலையில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.

குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 725.7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், சென்னை அருகே உள்ள ஃபோர்டு ஆலை இன்னும் ஃபோர்டு கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. முதலில் இந்த ஆலையை வாங்குவதற்கு மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து, ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் (JSW Group) எலக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் களமிறங்க திட்டமிட்டதால் சென்னை ஃபோர்டு ஆலையை வாங்குவதற்கு முயற்சித்தது. சீனாவை சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து 100 மில்லியன் டாலருக்கு ஃபோர்டு ஆலையை வாங்க ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஃபோர்டு ஆலை

இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதமே இந்த பேச்சுவார்த்தையை ஃபோர்டு நிறுவனம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் அருகே உள்ள ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறைமலைநகர் ஆலைக்கு மாற்று திட்டங்களை ஃபோர்டு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை ஏற்கெனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான மையமாக உருவெடுத்துவிட்டதால், இந்த ஆலையில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.