
பழைய படங்களை ஏன் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் : பாடலாசிரியர் பிரியன் கேள்வி
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் பிரியன். அவர் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் 'அரணம்'. கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். மற்றும் லகுபரன், கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர். நிதின் கே.ராஜ், நவுசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஷாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார். தமிழ் திரைக்கூடம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பிரியன். முன்னணி நடிகர்கள் நடித்துள்ள பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதோடு தமிழ் சினிமா கார்பரேட் கைகளுக்கு சென்று விட்டது என்றும் கூறினார்.
விழாவில் அவர் பேசியதாவது: அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம், 20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?. ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். அரணம் நிறையக் கற்றுத் தந்துள்ளது. தன்னுடைய படத்தின் விழாவிற்கே வராமல் இருக்கிறார்கள் நாயகிகள். ஆனால் வர்ஷா இந்தப்படத்தில் ஒரு உதவி இயக்குநராக பணியாற்றினார். இப்போது வரை படத்திற்காக பணியாற்றிக் கொண்டுள்ளார்.
படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால், நன்றாக ஓடும் சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஓரே படம் தான் ஓடுகிறது.
இப்போது எடுக்கும் 300 கோடி 400 கோடி படங்கள் எல்லாம் குப்பையாக இருக்கிறது. படம் எடுத்தா அடி, வெட்டு, இரத்தம் மட்டும் தான். கலைஞனுக்கு அறம் வேண்டாமா? காசு மட்டும் இருந்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?. 10, 20 வருடம் ஆன முத்து, ஆளவந்தான் எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம். யுடியூப்பில் ரஜினி ஜப்பானில் பேசும் முத்து படமே இருக்கிறது. எதற்கு மீண்டும் மீண்டும் இப்படி சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப்படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். ஒரு தரமான படைப்பை நாங்கள் தந்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.