மும்பை அணியில் இருந்து ரோகித் வெளியேறுகிறாரா? எம்ஐ ரியாக்ஷன்

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் (Mumbai Indians) ரோகித் சர்மா தொடர்ந்து பயணிப்பார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அந்த அணி அண்மையில் அறிவித்தது. இதனால் பெரும் சலசலப்புகள் உருவாகியிருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தை கவனித்து வரும் ஜெயவர்த்தனே, இதற்கு முதன்முறையாக பதில் அளித்துள்ளார். 

மகிலா ஜெயவர்த்தனே விளக்கம்

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது மகிலா ஜெயவர்த்தனேவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ” ரோகித் சர்மா (Rohit Sharma) மிக சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டன். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் இப்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்களிடம் எழுந்திருக்கும் கோபமும் நியாயமானது தான். ஆனால் தொலைநோக்கு பார்வையில் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனை ரோகித் சர்மாவும் புரிந்து கொள்வார். அவரும் தொடர்ந்து அணியுடன் பயணிப்பார். களதுக்கு உள்ளேயும், வெளியேயும் ரோகித் சர்மாவின் ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவை. அவர் எங்களுடன் தான் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அதிகாரி பேச்சு

இதுகுறித்து இன்னொரு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகி ஒருவர் பேசும்போது, ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது துருதிஷ்டவசமானது என்றாலும், அவர் அணியில் இருந்து விலகும் எண்ணம் ஏதும் இல்லை. இது குறித்து வெளியில் பேசப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகிப்பார். எதிர் வரும் ஐபிஎல் சீசனிலும் ரோதிக் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே விளையாடுவார் என தெரிவித்தார். 

ரோகித் சர்மா பிளான் என்ன?

ஆனால் ரோகித் சர்மா தரப்பில் இது குறித்து இன்னும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. ரோகித் சர்மாவின் மனைவி மற்றும் சூர்யகுமார் யாதவின் மனைவி ஆகியோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக காண்பித்துவிட்டனர். இருப்பினும் ரோகித் தரப்பில் ஒருவிதமாக மவுனமே நிலவுகிறது. ஐபிஎல் ஏலம் முடிவடைந்திருக்கும் இந்த சூழலில் அணிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. எந்த அணி வேண்டுமானாலும் எந்த பிளேயரையும் வேறு அணிக்கு கொடுக்கலாம், வாங்கலாம். அதனால் ரோகித் சர்மாவை வாங்க சில அணிகள் இனி முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் வேறு அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் ரியாக்ஷன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மாவை வாங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் பேசும்போது, ரோகித் சர்மாவை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒருபோதும் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எங்களுக்கு அந்த எண்ணமும் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல இப்போது வாய்ப்பு இருக்கிறதா? என்றால் இருக்கிறது. அவரை விரும்பும் அணி மும்பை அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி டீல் ஓகே செய்து கொள்ளலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.