'நேர்' பட ரிலீஸிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற வெற்றி கூட்டணியின் அடுத்த படமாக உருவாகியுள்ளது 'நேர்'. நீதிமன்றத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் இன்று டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபக் உன்னி என்கிற கதாசிரியர் நேர் படத்தின் கதை என்னுடையது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபற்றி அவர் மனுவில் கூறும்போது, “இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இணை எழுத்தாளர் சாந்தி மாயா தேவியும் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்று வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்தபோது 49 பக்கங்கள் அடங்கிய இந்த கதையின் காப்பியை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டனர். பின்னர் படத்திலிருந்து என்னை நீக்கியும் விட்டனர். சமீபத்தில் 'நேர்' படத்தின் ட்ரெய்லர் காட்சிகளை பார்த்த போதுதான் இது என்னுடைய கதை என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் நேர் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதே சமயம் படத்தின் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.