இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

புதுடெல்லி: இந்தியக் கடலோரப் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன் – Drone) மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுடன் தொடர்புடைய லைபீரிய தேசிய கொடி ஏற்றிய வணிகக் கப்பல் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் அரபிக் கடலில் சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து, கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீ பற்றியுள்ளது. இந்தத் தாக்குதலால் உயிரிழப்பு நேரிட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இந்த சம்பவத்தை அடுத்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று 20 பேருடன் அந்த வணிகக் கப்பலை நோக்கி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலோர காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் விக்ரம், வணிகக் கப்பலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில், இந்தத் தாக்குலுக்கும் ஈரானில் செயல்படும் புரட்சிப் படை அல்லது ஹவுதி தீவிரவாத குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த மாதம் இந்திய பெருங்கடலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஈரானிய புரட்சிப் படையானது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதில், அந்தக் கப்பல் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, ஈரான் ஆதரவு ஹவுதி படை, செங்கடலில் தனது தாக்குதலை அதிகப்படுத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி படை அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து, இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பல கப்பல்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொண்டுள்ளன.

செங்கடலில் ஹவுதி படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்ந்தி உள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 35 நாடுகளைச் சேர்ந்த 10 வணிகக் கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஹவுதி படையினரின் பின்னணியில் ஈரானுக்கு ஆழமான தொடர்பு உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் தொடர்ந்து குற்றங்களை செய்தால் மத்திய தரைக் கடலை பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என்று ஈரானிய புரட்சிப் படையின் தளபதி கூறி இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.