பாரீஸ்,
நாட்டின் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார்.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் பிரான்ஸ் பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.