தமிழகத்தில் டிச. 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். டிச. 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.