பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு; நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி,

தெற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள ‘உலவுன்’ எரிமலை வெடித்துச் சிதறி கரும்புகையை வெளியேற்றி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் இருந்து 26,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவை என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பப்புவா நியூகினியா உள்ளது.

இந்நிலையில் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூகினியாவுக்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என இந்தியா அறிவித்திருந்தது. இதன்படி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து நிவாரணப் பொருட்கள் பப்புவா நியூகினியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்படி கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், சுகாதார பொருட்கள், உணவுப் பொருட்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற 11 டன் நிவாரணப் பொருட்களும், 6 டன்கள் மருத்துவ உதவி பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.